முல்லைப்பாட்டு மூலமும் உரையும்
முல்லைப்பாட்டு மூலமும் உரையும்
கார்காலத்தில் மழைபொழியும் மாலை நேரம்:
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,
(1 - 6)
அருஞ்சொற்பொருள்: 1. நனம் = அகற்சி; தலை
= இடம்;
வளைஇ = வளைத்து; நேமி = சக்கரம்;
2. வலம்புரி = வலமாகச் சுழிந்திருக்கும்
சங்கு;
பொறித்த = வைத்த;
மா = திருமகள்; தாங்கு = தாங்குகின்ற;
தடக்கை = பெரிய கை; 3. நீர் செல = நீரை வார்க்க; நிமிர்ந்த =
உயர்ந்து நின்ற;
மாஅல் = மால் = திருமால்; 4. பாடு = ஒலி; இமிழ்தல் = ஒலித்தல்; பனிக்கடல் = குளிர்ந்த கடல்; பருகி = குடித்து;
வலன் = வலிமை; ஏர்பு = எழுந்து; 5. கோடு = மலை; கொண்டு = குறித்து (நோக்கி); கொடுஞ் செலவு = விரைந்து செல்லல்; எழிலி = மேகம்; 6. பெயல் = மழை; பொழிந்த = பெய்த; சிறு = சிறுபொழுது; புன் = துன்பம்.
உரை: சக்கரம், வலம்புரிச் சங்கு ஆகியவற்றைத் தன் பெரிய கைகளில் வைத்துக்கொண்டு, திருமகளை மார்பில்
தாங்கும் திருமால், மாபலிச் சக்கரவர்த்தி[1] தாரை வார்த்த
நீர் கையில்பட்ட அளவிலே நிமிர்ந்து எழுந்த தோற்றத்தைப் போல், அகன்ற இடத்தையுடைய இந்த
உலகத்தை வளைத்து, ஒலி முழங்கும் குளிர்ந்த கடல் நீரைப் பருகி, வலிமையுடன் உயர்ந்து எழுந்து, மலைகளை நோக்கி விரைந்து செல்லும் மேகங்கள் பெருமழையைப்
பொழிந்த, சிறுபொழுதாகிய துன்பம் தரும் மாலைப்பொழுதில்,
பெருமுதுபெண்டிர் விரிச்சி கேட்டல்:
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப (7 - 11)
அருஞ்சொற்பொருள்: 7. கடி = காவல்; மூதூர் = பழைய ஊர்; மருங்கில் = பக்கத்தில்; போகி = சென்று; 8. யாழ்இசை = யாழின்இசை; இனவண்டு = வண்டினம்; ஆர்ப்ப = ஆரவாரிக்க; 9. நாழி = படி; நறு = மணமிக்க; வீ = மலர்; 10. அரும்பு = மொட்டு; அவிழ்தல் = மலர்தல்; அலரி = மலர்ந்த பூ; தூஉய் = தூவி; கைதொழுது = கையால் தொழுது; 11. பெருமுது = பெரிதும் வயது முதிர்ந்த; பெண்டிர் = பெண்கள்; விரிச்சி = நற்சொல்; நிற்ப = நிற்பர்.
உரை: பெரிதும் வயது முதிர்ந்த பெண்டிர், எவரும் அணுக முடியாத அரிய காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் சென்று, யாழிசை போல் வண்டுகள் ஆரவாரிக்க அரும்புகள் மலர்ந்திருக்கும் நறுமணம்
மிக்க முல்லை மலரையும், படியில் கொண்டு சென்ற நெல்லையும் தூவி,
இறைவனை வேண்டிக் கையால் தொழுது நற்சொல் கேட்டு நின்றனர். அப்பொழுது,
ஆயர்குல மகளின் நற்சொல் கேட்டலும் தலைவியை ஆற்றுவித்தலும்:
சிறுதாம்பு தொடுத்த பசலைக்
கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர்
பின்நின்று உய்த்தர,
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்:
அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர்
வினைமுடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீநின்
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண்
புலம்புமுத்து உறைப்ப, (12 - 23)
அருஞ்சொற்பொருள்: 12. சிறுதாம்பு = சிறிய கயிறு; தொடுத்த = கட்டப்பட்ட; பசலை = இளமை; 13. உறுதுயர் = அடைகின்ற துயர்; நோக்கி = பார்த்து;
ஆய்மகள் = இடையர்
குலப்பெண்;14.
நடுங்கு =
நடுங்கும்;
சுவல் = தோள்; அசைத்த = கட்டிய;
கையள் = கைகளை உடையவயள்; கைய = கையிலுள்ள;
15. கொடுங்கோல் = வளைந்த கோல்; கோவலர் = இடையர்; பின்நின்று = பின்னே நின்று; உய்த்தர = செலுத்த;
16. இன்னே = இப்பொழுதே; வருகுவர் = வருவர்;
தாயர் = தாய்ப்பசு; என்போள் = என்று கூறியவள்; 17. நன்னர் = நன்மை; நன்மொழி = நற்சொல்;
கேட்டனம் = கேட்டோம்; 18. வாய்ப்புள் = நற்சொல்;
தெவ்வர் = பகைவர்; 19. முனை = பகைவர் இடம்; கவர்ந்து
= கைப்பற்றி;
கொண்ட = எடுத்துக்கொண்ட; திறை = கப்பம்; திறையர் =
கப்பப் பொருளாகப் பெற்றவர்; வினை = தொழில்;
20. வருதல் = வருவது; வாய்வது = உண்மை;
21. பருவரல் = துன்பம்; எவ்வம் = வருத்தம்;
களை = நீக்கு; மாயோய் = மாமை நிறம் உடையவளே; என = என்று; 22. காட்டவும் = வற்புறுத்தவும்; காணாள் = தேற்றுதலை ஏற்காது; கலுழ்தல் = அழுதல்; சிறப்பு =
மிகுதி;
23. உண்கண் = மையுண்டகண்; புலம்பு = தனிமை;
முத்து = முத்துப்போன்ற நீர்த்துளி; உறைப்ப = ஒழுக.
உரை: “சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தன் தாயினைக் காணாது
துயருற்று அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்துக் குளிரால் நடுங்கிக்கொண்டு, தோளில் குறுக்கும் நெடுக்குமாகக் கைகளைக் கட்டியுள்ள இடையர்குலப் பெண், “வளைந்த கோலினைக்
கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த, உன்னுடைய தாய் இப்பொழுதே வருவர்” என்று கூறிய நன்மை தரும் நல்ல சொல்லைக் கேட்டோம்.
நல்லவர்களின் நல்ல வாய்ச் சொல்லைக் கேட்டதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து, போரை
முடித்துத் தலைவன் வருவான். இது உண்மை. நீ
உன்னுடைய துன்பத்தால் எழுந்த வருத்தத்தினைக் களைவாயாக! மாந்தளிரின் நிறத்தினை
உடையவளே!” என்று தலைவியிடம் பெருமுது பெண்டிர் பலமுறை வற்புறுத்திக் கூறவும், தலைவி அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளாமல், தன் மலர்
போன்ற கண்களிலிருந்து முத்துப்போல் தனித்து வீழ்கின்ற நீர்த்துளிகள் ஒழுக, வருத்தத்தில் இருந்தாள்.
வீரர்கள் பாசறை அமைத்தல்:
கான்யாறு தழீஇய அகல்நெடும்
புறவில்,
சேண்நாறு பிடவமொடு பைம்புதல்
எருக்கி,
வேட்டுப்புழை அருப்பம்
மாட்டி,
காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் பரந்த
பாடி (24 - 28)
அருஞ்சொற்பொருள்: 24. கான்யாறு = காட்டாறு; தழீஇய = சூழ்ந்த; அகல் நெடும் = அகன்று நீண்ட; புறவு = முல்லைநிலக்
காடு;
25. சேண் = தொலைவு; நாறு = மணம்வீசும்;
பிடவமொடு = பிடவச் செடிகளோடு; பைம் = பசுமையான;
புதல் = புதர்; எருக்கி = அழித்து;
26. வேட்டு = வேட்டுவர்; புழை = சிறுவாயில்;
அருப்பம் = அரண்; மாட்டி = அழித்து; காட்ட = காட்டிலுள்ள;
27. இடுமுள் = முள்ளால் இடப்பட்ட; புரிசை = மதில்;
ஏமுற = காவலாக; வளைஇ = வளைந்த;
28. படுநீர் = ஒலிக்கும் நீர்; புணரி = கடல்;
பரந்த = அகன்ற; பாடி = பாசறை.
உரை: காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லைநிலக் காட்டில்,
நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவச் செடிகளையும், பசுமையான புதர்களையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில் அமைந்த அரண்களையும் அழித்து, காவலுக்காகக் காட்டிலுள்ள
முள்ளால் மதிலை வளைத்துக் கட்டிய இடத்தில், ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல் பரந்த பாசறையை வீரர்கள் அமைத்தனர்.
முற்றத்தில் நிற்கும் யானையின் நிலை:
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல்
நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு, கதிர்மிடைந்து யாத்த,
வயல்விளை, இன்குளகு உண்ணாது, நுதல்துடைத்து,
அயில்நுனை மருப்பின்தம்
கையிடைக் கொண்டென,
கவைமுட் கருவியின், வடமொழி பயிற்றி,
கல்லா இளைஞர், கவளம் கைப்ப (29 - 36)
அருஞ்சொற்பொருள்: 29. உவலை = தழை; கூரை = மேற்கூரை; ஒழுகிய தெருவில் = ஒழுங்காக அமைக்கப்பட்ட தெருவில்; 30. கவலை = நாற்சந்தி கூடுமிடம்; முற்றம் = முன்னிடம்;
காவல் நின்ற = காவலாக நின்ற; 31. தேம் = மதநீர்;
கவுள = கன்னத்தை உடைய; 32. ஓங்குநிலை
= ஓங்கி வளர்ந்துள்ள;
கதிர் = நெற்கதிர்; மிடைந்து = நெருங்க;
யாத்த = கட்டிய; 33. வயல் விளை = வயலில் விளைந்த; குளகு =
அதிமதுரத்தழை;
உண்ணாது = உணவாகக் கொள்ளாது; நுதல் = நெற்றி;
34. அயில் = கூர்மை;
நுனை = முனை; மருப்பு = கொம்பு (தந்தம்); கையிடை =
தும்பிக்கையின் இடையில்;
கொண்டென = கொண்டிருக்க; 35. கவைமுள் = பிளவுபட்ட முள்; கருவியின் = பரிக்கோலின்; பயிற்றி = பல காலும் கூறி; 36. கல்லா =
கல்லாத;
இளைஞர் = யானையைச் செலுத்தும் பாகர்; கவளம் = உணவு; கைப்ப = ஊட்ட.
உரை: பாசறையில் தழையால் கூரை வேயப்பட்டு, ஒழுங்காக அமைந்துள்ள தெருவில், நாற்சந்தி கூடுமிடத்தில் உள்ள முற்றத்தில் காவலுக்காக நின்ற, மதநீர்
ஒழுகும் கன்னங்களும், சிறிய கண்களும்
கொண்ட யானை, உயர்ந்து வளர்ந்த
கரும்போடு நெருங்கக் கட்டிய நெற்கதிர்களையும், வயலில்
விளைந்த இனிய அதிமதுரத் தழைகளையும் உண்ணாது அவற்றைத் தனது நெற்றியில் துடைத்து, கூரிய முனையையுடைய கொம்பின் மேலேற்றி,
தும்பிக்கையில் அடக்கிக் கொண்டிருந்தது. யானையைப் பயிற்றும் மொழியைத் தவிர வேறெதுவும்
கற்காத பாகர், வடமொழியில்
யானையிடம் பேசிக் கவளத்தைத் தின்னுமாறு யானைக்கு ஊட்டினர்.
பாசறையில் அரண்கள்:
முக்கோல் அசைநிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறுவாங்கு
இருக்கை
பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகுநிரைத்து,
வாங்குவில் அரணம் அரணம் ஆக, (37
- 42)
அருஞ்சொற்பொருள்: 37. கல் = காவிக்கல்; தோய்த்து = நனைத்து; ஊறவைத்து;
உடுத்த = அணிந்த; படிவம் = தவவேடம்;
பார்ப்பான் = அந்தணன்; 38. முக்கோல் = மூன்று பிரிவாக அமைந்துள்ள கோல்; அசைநிலை = தங்க வைத்த தன்மை; கடுப்ப (உவம
உருபு) = போல;
நல்போர் = நல்லபோர்; 39. ஓடா = (புறமுதுகிட்டு) ஓடாத; வல்வில் =
வலிமையான;
தூணி = அம்புக்கூடு; நாற்றி = தொங்கவிட்டு;
40, கூடம் = கூடாரம்; குத்தி = ஊன்றி;
கயிறுவாங்கு = கயிற்றால் வளைத்த; இருக்கை = இருப்பிடம்; 41. பூந்தலை = பூவேலைப்பாடு அமைந்த தலைப்பகுதி; குந்தம் = கைவேல்;
குத்தி = நட்டு; கிடுகு = படல்;
கேடயம்; நிரைத்து =
வரிசையாக வைத்து;
42. வாங்குவில் = வளைந்த வில்; அரணம் = அரண்;
அரணமாக = அரண்களாக.
உரை: தவவேடமுடைய அந்தணர், தம் காவி நிறம்
தோய்ந்த ஆடையை, முக்கோலை நட்டு அதன்மேல் தொங்கவிட்டிருப்பது போல, வீரர்கள் தாம் செய்கின்ற நல்ல போரில் புறமுதுகிட்டு ஓடாமல்
இருப்பதற்குக் காரணமான வலிய வில்லை ஊன்றி
அதன் மேல் அம்புக்கூட்டை தொங்கவிட்டனர். கூடாரம் அமைப்பதற்காக வில்லை ஊன்றி
கயிற்றால் வளைத்துக் கட்டிய இருப்பிடத்தில்,
பூ வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி கேடயங்கள வரிசையாக வைத்து, வீரர்கள்
தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு அரண்களை அமைத்தனர்.
பாசறையின் நடுவில் மன்னனுக்கு ஒரு தனியிடம்:
வேறுபல் பெரும்படை நாப்பண், வேறுஓர்,
நெடுங்காழ்க் கண்டம் கோலி, அகம்நேர்பு (43 - 44)
அருஞ்சொற்பொருள்: 43. வேறுபல் = பல்வேறு; பெரும்படை = பெரிய படை; நாப்பண் = நடுவிடத்தில்; வேறு ஓர் =
வேறோர்;
44. நெடுங்காழ் = நீண்ட கோல்; கண்டம் = கூறுபடுத்தற்குரிய பல
நிறத்தாலான திரை;
கோலி = வளைத்து; அகம் = உள்வீடு;
நேர்பு = உடன்பாடு.
உரை: வேறு
வேறான பல்வேறு படைகளின் நடு விடத்தில், நீண்ட கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த திரைகளால்
கூறுபடுத்தி, வேறோர் தனி இடம் மன்னனுக்கென்று அமைத்தனர்.
பாசறையில் விளக்கேற்றும் மங்கையர்:
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து,
இரவுபகல் செய்யும் திண்பிடி
ஒள்வாள்
நெய்உமிழ் சுரையர்
நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் நந்துதொறும்
மாட்ட, (45 - 49)
அருஞ்சொற்பொருள்: 45. குறுந்தொடி = சிறிய வளையல்; முன்கை = கையின் முன்பகுதி; கூந்தல் = தலைமயிர்;
அம் = அழகிய; சிறு = சிறிய;
புறத்து = முதுகுப்பகுதியில்; 46. இரவுபகல் = இரவைப் பகலாக்கும்; செய்யும் = செய்கின்ற;
திண்பிடி = வலிய கைப்பிடி; ஒள்வாள் = ஒளி வீசும் வாள்; 47. விரவு =
கலந்த;
சேர்ந்த; வரி = நிறம்; கச்சு = இரவிக்கை; பூண்ட = அணிந்த;
மங்கையர் = பெண்கள்; 48. நெய்உமிழ் = நெய் வார்க்கும்; சுரையர் =
திரிகுழாயினை உடையவர்கள்;
நெடுந்திரி = நீண்டதிரி; கொளீஇ = கொளுத்தி;
49. கையமை = கையிலே இருக்கின்ற; விளக்கம் =
விளக்கின்;
நந்துதொறும் = குறையும் தொறும்; மாட்ட = கொளுத்த.
உரை: குறுகிய வளையணிந்த முன் கையினையும், கூந்தல் புரளும் அழகிய சிறு முதுகுப்புறத்தையும் உடைய
பெண்கள் இரவைப் பகலாக்கும் வலிய பிடி அமைந்த ஒளி வீசும் வாளினைப் பல்வேறு
நிறமமைந்த கச்சில் சேர்த்து கட்டியிருந்தனர். பாவையின் கையிலே இருக்கின்ற விளக்கில் நெய் குறையுந் தொறும், நெய் வார்க்கும் குழாயினைக் கொண்டு நெய் வார்த்து, நெடுந்திரியினைக் கொளுத்தினர்.
பாசறையில் மெய்காப்பாளர்:
நெடுநா ஒண்மணி நிழத்திய
நடுநாள்,
அதிரல் பூத்த ஆடுகொடிப்
படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு அசைவந்
தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த
தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (50 - 54)
அருஞ்சொற்பொருள்: 50. நெடுநா = நீண்டநாக்கு; ஒண்மணி = ஒளிபொருந்திய மணி (அழகிய மணி);
நிழத்திய = ஓசை அடங்கிய; நடுநாள் = நடு யாமத்தில்; 51. அதிரல் =
காட்டு மல்லி;
பூத்த = பூத்திருக்கும்; ஆடுகொடி = ஆடுகின்ற கொடி; படாஅர் =
சிறுதூறுகள்;
52. சிதர் = நீர்த் திவலை, மழைத்தூறல்;
வரல் = வருகின்ற; அசை = அசைந்து;
வளி = காற்று; வந்துஆங்கு = வருவது போல; 53. துகில் =
துணி;
முடித்து = கட்டி (தலைப்பாகையாகக் கட்டி); போர்த்த = உடம்பைப் போர்த்தி; தூங்கல் = தூக்க
மயக்கம்;
ஓங்கு = உயர்ந்த; நடை = ஒழுக்கம்;
54. பெருமூதாளர் = வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்; ஏமம் = காவல்; சூழ = சுற்றிவர.
உரை: நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமத்தில், காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு
தூறுகள், நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப்
போல தலையில் தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர், தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச்
செய்தனர்.
நாழிகைக் கணக்கர்:
பொழுதுஅளந்து அறியும், பொய்யா மாக்கள்,
தொழுதுகாண் கையர், தோன்ற வாழ்த்தி,
‘எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்; நின்
குறுநீர்க் கன்னல் இனைத்து’
என்று இசைப்ப (55 - 58)
அருஞ்சொற்பொருள்: 55. பொழுது அளந்து = பொழுதினை இத்துணை என்று கணக்கிட்டு; அறியும் = அறிகின்ற; பொய்யா மாக்கள் = பொய் கூறாத மக்கள்; 56. தொழுது =
வணங்கி;
காண் = கண்டு; கையர் = கைகளையுடையர்;
தோன்ற = புகழ் தெரியுமாறு; வாழ்த்தி = வாழ்த்திக்கூறி; 57. எறிநீர் = அலையெறியும் கடல்; வையகம் = ஞாலம்;
வெலீஇய = வெல்வதற்கு; செல்வோய் = செல்பவனே;
நின் = உன்னுடைய;
58. குறுநீர் = சிறிய நீர்; கன்னல் = நாழிகை வட்டில் (காலத்தை அளந்து அறியும் கருவி); இனைத்து = சென்ற நாழிகை இவ்வளவு; இசைப்ப = சொல்ல.
உரை: பொய் கூறாமல்
(சரியாக), நேரத்தைக் கணக்கிட்டு, இவ்வளவு என்று கூறும் நாழிகைக் கணக்கர் மன்னனைக் கண்டு தொழுது, அவன் புகழ் தோன்றுமாறு வாழ்த்தி, ”அலைகடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை வெல்லுவதற்குச் செல்பவனே!
உனது நாழிகை வட்டிலில் (நேரத்தை அளந்தறியும் கருவி ) சென்றுள்ள நேரம் இவ்வளவு” என்று அறிவித்தனர்.
மன்னன் இருக்கும் இடத்தில் யவனர்:
மத்திகை வளைஇய, மறிந்துவீங்கு செறிவுஉடை,
மெய்ப்பை புக்க வெருவரும்
தோற்றத்து,
வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண்
நல்இல்,
திருமணி விளக்கம் காட்டி,
.............. (59 - 63)
அருஞ்சொற்பொருள்: 59. மத்திகை = குதிரைச் சம்மட்டி (குதிரைச்
சவுக்கு);
வளைஇய = வளைத்துக் கட்டிய; மறிந்து = மடங்கி; வீங்கு = புடைத்து; செறிவுடை = நெருக்கிக் கட்டிய; 60. மெய்ப்பை = சட்டை;
புக்க = அணிந்த; வெரு = அச்சம்; வெருவரும் =
அச்சம் தரும்;
தோற்றத்து = தோற்றம் உடையவராய்; 61. வலிபுணர் = வலிமை பொருந்திய; யாக்கை = உடம்பு;
வன்கண் = திண்மையான, வீரம் பொருந்திய;
யவனர் = கிரேக்கர், சோனகர் (Ionians
or Greeks); 62. புலித்தொடர் = புலிச்சின்னம் பொறித்த சங்கிலித்தொடர்; விட்ட = தொங்கவிட்ட; புனை = அலங்கரிக்கப்பட்ட; மாண் = பெருமை; நல்இல் = நல்ல இல்லத்தில்; 63. திருமணி = அழகிய மணி;
விளக்கம் = விளக்கு; காட்டி = ஒளிரச் செய்து.
உரை: குதிரைச்
சவுக்கினை மடக்கி வளைத்துக் கட்டியதால் புடைத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டிய
ஆடையும்,
சட்டையும் அணிந்த, அச்சம் தரும் தோற்றமும் வலிமையான உடம்பும் வீரமும் உடைய யவனர், புலிச்சங்கிலி தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமை பொருந்திய (மன்னன் இருக்கும்) நல்ல இல்லத்தில் அழகிய
மணி விளக்கினை ஒளிரச் செய்தனர்.
மன்னனின் பள்ளியறையில் மிலேச்சர்:
......................................................திண்ஞாண்
எழினி வாங்கிய ஈர்அறைப்
பள்ளியுள்
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக, (63 - 66)
அருஞ்சொற்பொருள்: 63. திண்ஞாண் = வலிய கயிறு; 64. எழினி = திரைச்சீலை; வாங்கிய = வளைத்து;
ஈரறை = இரண்டு அறைகள்; பள்ளியுள் = படுக்கையறையில்; 65. உடம்பின்
= உடம்பால்;
உரைக்கும் = தெரிவிக்கும்; உரையா = பேசாத;
நாவின் = நாவினையுடைய; 66. படம் = சட்டை;
படம்புகு = சட்டையணிந்த; மிலேச்சர் = ஆரியர்;
உழையர் = அருகிலுள்ளவர்; ஆக = அவ்வாறிருக்க.
உரை: வலிய
கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச்சீலைகள் அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட
மன்னனின் பள்ளியறையில், (ஓரறையில்)
செய்திகளை உடலசைவால் தெரிவிக்கும் நாவால் உரைக்கமுடியாத சட்டையணிந்த மிலேச்சர்கள்
அருகாமையில் இருப்பர்.
பாசறையில் உறக்கமில்லாத மன்னனின் மனநிலை:
எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு
பதைப்பன்ன பரூஉக்கை துமிய,
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல்துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து,
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும்;
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து…... ( 67 - 76)
அருஞ்சொற்பொருள்: 67. மண்டு = மிகுதி; அமர் = போர்; நசை = விருப்பம்; நசையொடு = விருப்பத்தோடு; கண்படை = உறக்கம்; பெறாஅது = கொள்ளாது;
68. எறி = எறிந்த; எஃகம் = வேல்;
பாய்தலின் = பாய்ந்ததால்; கூர்ந்து = மிக்கு;
69. பிடி = பெண்யானை; கணம் = கூட்டம்;
மறந்த = மறந்திருக்கின்ற; வேழம் = ஆண்யானை;
வேழத்து = ஆண் யானையினது; 70. பதைப்பு = துடிப்பது;
அன்ன = போல; பரூஉக்கை = பருத்த துதிக்கை; துமிய = அற்று வீழ; 71. தேம்பாய் = தேன்ஒழுகுகின்ற; தேன்சிந்துகின்ற; கண்ணி = மாலை; நல் = நல்ல;
வலம் = வெற்றி; திருத்தி = செம்மையாக,
மனநிறைவாக; 72. சோறு =
செஞ்சோற்றுக்கடன் (தனக்கு உணவளித்தவர்களுக்குச் செய்யும் கடன்); வாய்த்து = தப்பாமற் செய்து; ஒழிந்தோர் = இறந்தோர்;
உள்ளியும் = நினைத்தும்; தோல் = தோலாலானக் குதிரைக் கவசம்; துமிபு = அறுத்து;
73. வை = கூர்மை; நுனை = முனை;
பகழி = அம்பு; மூழ்கலில் = அழுந்தியதால்; செவி = காது; சாய்த்து = சாய்த்த; 74. உண்ணாது = உணவினை உண்ணாது; உயங்கும் =
வருந்தும்;
மா = குதிரை; சிந்தித்தும் = நினைந்தும்;75. ஒருகை = ஒரு கை; பள்ளி = படுக்கை; ஒருகை = மற்றொரு கை; 76. முடியொடு = தலை முடியோடு; கடகம் = கையிலே
அணிகின்ற அணிகலன்;
சேர்த்தி = சேர்த்து வைத்து; நெடிது = நெடுநேரம்.
உரை: போர்
செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டதால், பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல் நாள் நடைபெற்ற போர்க்களக் காட்சிகளை
நினைத்தபடியே) மன்னன் படுத்திருந்தான்.
பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்ததால் புண்பட்டு, பெண் யானைகளை மறந்திருக்கின்ற ஆண்யானைகளை நினைந்தும், அடிபட்ட பாம்பு துடிப்பதைப் போல் துடித்து விழும்படி, யானைகளின் பருத்த துதிக்களை வெட்டி வீழ்த்தி, தாம் அணிந்திருந்த தேன் ஒழுகும் வஞ்சிமாலைக்கு வெற்றியைத் தந்து,
செஞ்சோற்றுக் கடன் தீர்த்துப் போர்க்களத்திலே இறந்த படைவீரர்களை நினைந்தும்,
தோலாலான கவசத்தை அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள்
பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து, உணவு உண்ணாது வருந்தும்
குதிரைகளை நினைந்தும், ஒரு கையினைப்
படுக்கையின் மேல் ஊன்றி, கடகம் அணிந்த மற்றொரு கையினால் தலையைத் தாங்கி, மன்னன் நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
வெற்றிக்குப் பிறகு:
பகைவர்ச் சுட்டிய படைகொள்
நோன்விரல்,
நகைதாழ்க் கண்ணி நல்வலம்
திருத்தி,
அரசுஇருந்த பனிக்கும்
முரசுமுழங்கு பாசறை
இன்துயில்
வதியுநன்.................... (77 - 80)
அருஞ்சொற்பொருள்: 77. சுட்டிய = குறித்த; படை = படைக்கலம்;
கொள் = எடுத்த; செலுத்திய;
நோன் = வலிய; விரல் = விரல்களையுடைய (கைகளைக் குறிக்கும்); 78. நகை = ஒளி;
தாழ் = தங்கும்; கண்ணி = மாலை;
நல் = நல்ல; வலம் = வெற்றி;
திருத்தி = செம்மையாக, மனநிறைவாக;
79. அரசு = அரசன் (பகையரசன்); பனிக்கும் = நடுங்கும்;
முரசு = முரசு (வெற்றி முரசு); முழங்கும் = ஒலிக்கும்; 80. இன் = இனிய;
துயில் = உறக்கம்; வதியுநன் = இருப்பவன்;
தங்குகின்றவன்.
உரை: பகைவரைக்
குறித்துப் படைக்கலங்களைச் செலுத்திய தனது வலிமையான விரலாலே பகைவரை வென்று,
தான் சூடிய வஞ்சி மாலைக்கு வெற்றியை நிலைபெறச் செய்து மறுநாள் போரில்
வெற்றி பெற்றதால் மனநிறைவு பெற்று, பகையரசர் கேட்டு நடுங்கும்படி வெற்றி முரசு முழங்க, மன்னன் பாசறையில் இனிமையாகத் துயில்
கொண்டான்.
தலைவனைக் காணாது வருந்தும் தலைவி:
……………………….. காணாள் துயருழந்து
நெஞ்சுஆற்றுப் படுத்த
நிறைதபு புலம்பொடு,
நீடுநினைந்து, தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
பாவை விளக்கில் பரூஉச்
சுடர்அழல
இடம்சிறந்து உயரிய எழுநிலை
மாடத்து,
முடங்குஇறைச் சொரிதரும்
மாத்திரள் அருவி
இன்பல் இமிழ்இசை ஓர்ப்பனள்
கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின ....
.... .... .... (80 - 89)
அருஞ்சொற்பொருள்: 80. காணாள் = காணாதவளாய்; துயர் = துன்பம்;; உழந்து = வருந்தி;
81. நெஞ்சு = நெஞ்சம்; ஆற்றுப்படுத்த = வழிப்படுத்த; நிறை = ஒரு
காரியத்தைப் பிறர் அறியாமல் செய்தல்; தபு = கெடு;
புலம்பொடு = தனிமையில்; 82. நீடு = நீண்டநேரம்;
தேற்றியும் = தேற்றிக்கொண்டும்; ஓடுவளை = ஓடுகின்ற வளையல்; திருத்தியும் = திருத்தமுற அணிந்தும்; 83. மையல் = மயக்கம்;
ஒய்யென = ஒய் என்ற ஒலி; உயிர்த்தும் = பெருமூச்சு விட்டும்; 84. ஏ = அம்பு;
உறுதல் = இருத்தல், தங்குதல்;
மஞ்ஞை = மயில்; மஞ்ஞையின் = மயில்
போல்;
இழை = அணிகலன்; நெகிழ்ந்து = கழன்று;
85. பாவை = கைப்பாவை;
விளக்கில் = விளக்கின்; பரூஉச்சுடர் = பெரிய சுடர்; அழல = எரிய; 86. உயரிய =
உயர்ந்த;
எழுநிலை = ஏழு அடுக்கு; மாடத்து = வீட்டில்;
87. முடங்கு = மடங்கிய; இறை = நீர்விழும் கூடல்வாய் (இரு பகுதிகள் பொருந்தும் இடம்); சொரிதரும் = விழுகின்ற; மாத்திரள் = பெரிது திரண்டு; அருவி =
நீரோட்டம்;
88. இன் = இனிய; பல் = பலவாகிய;
இமிழ் = முழங்கும்; இசை = ஒலி;
ஓர்ப்பனள் = கேட்டவளாய்; கிடந்தோள் = படுத்துக் கிடந்தவள்; 89. அம்செவி = அழகிய செவி;
நிறைய = நிறையுறுமாறு; ஆலின = ஆரவாரித்தன;
உரை: தலைவன் வரக்காணாது துயருற்று வருந்திய
தலைவியை, அவள் நெஞ்சம், ‘ஆற்றியிரு’ என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால், தலைவியோ துயரத்தை மறைக்க முடியாது, வருத்தத்தில் இருந்தாள். நீண்ட நேரம் சிந்தித்தாள். பின்
தன்னைத் தேற்றிக் கொண்டாள்; கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற,
கழறாமல் அணிந்து கொண்டாள்; அறிவு மயங்கியும், அவ் அறிவு மயக்கத்தால் பெருமூச்செறிந்தும்,
அம்பு தைத்த மயில் போல் நடுங்கினாள். அவளின் அணிகலன்கள்
நெகிழ்ந்தன. பாவை விளக்கின் பெரிய சுடர் எரிய, அகன்று சிறந்து உயர்ந்து விளங்கும் ஏழு அடுக்கான அழகிய வீட்டில், கூரை கூடும் இடங்களில் மழைநீர் அருவி போலச் சொரிந்து.
அதனால் ஏற்பட்ட இனிய பலவாகிய முழக்கத்தினைக் கேட்டவாறே தலைவி படுத்துக்
கிடக்கின்றாள். அத்தலைவியின் காதுகள் நிறையுமாறு ஆரவாரித்தன.
போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பிவருதல்:
………………………………………..
வென்று, பிறர்
வேண்டுபுலம் கவர்ந்த, ஈண்டுபெருந் தானையொடு
விசயம், வெல்கொடி உயரி, வலன்ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப ....
.... ....(89
- 92)
அருஞ்சொற்பொருள்: 89. வென்று = வெற்றி பெற்று; பிறர் = பகைவர்; 90. வேண்டு = விரும்பு;
புலம் = இடம்; கவர்ந்த = அகப்படுத்த;
ஈண்டு = இங்கு; பெருந்தானையொடு = பெரும் படையொடு; 91. விசயம் =வெற்றி;
வெல்கொடி = வெற்றிக் கொடி; உயரி = உயர்த்தி;
வலன் = வெற்றிக்கு; நேர்பு = ஒத்து; 92. வயிர் =
ஊது கொம்பு;
வளை = சங்கு; ஆர்ப்ப = முழங்க.
உரை: பகைவரை
வென்று அவர்கள் விரும்புகின்ற நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையோடு வெற்றிக் கொடியை உயர்த்தியபடி, வெற்றியை அறிவிக்கும் வகையில், ஊது கொம்பும், சங்கும் முழங்கத் தலைவன் திரும்புகின்றான்.
கார்காலதில் செழித்திருக்கும் முல்லைநிலம்:
.................................................அயிர
முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ,
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப்
பெருவழி,
வானம் வாய்த்த வாங்குகதிர்
வரகின்,
திரிமருப்பு இரலையொடு மடமான்
உகள,
எதிர்செல் வெண்மழை பொழியும்
திங்களில்,
(92 - 100)
அருஞ்சொற்பொருள்: 92. அயிர் = நுண்மணல்; 93. செறியிலை
= நெருங்கிய இலை;
காயா = காயா மலர் (நீல நிறமான மலர்); அஞ்சனம் = மை; 94. முறி =
தளிர்;
இணர் = கொத்து; கொன்றை = கொன்றை மலர்;
நன்பொன் = நல்ல பொன்; கால = சொரிய;
95. கோடல் = வெண்காந்தள்; குவி = குவிந்த;
முகை = மொட்டு; அங்கை = அழகிய கை;
அவிழ = மலர; 96. தோடு = பூவின் இதழ்;
ஆர் = நிறைந்த; தோன்றி = செங்காந்தள்;
குருதி = உதிரம்
(இரத்தம்);
பூப்ப = பூக்க; 97. கானம் = காடு;
நந்திய = தழைத்த, செழித்த;
செந்நிலம் = செம்மையான நிலம்; பெருவழி = பெரிய வழி; 98. வாய்த்த =
தப்பாமல் பெய்த;
வாங்கு = வளைந்த; 99. திரி = முறுக்கிய;
மருப்பு = கொம்பு; இரலை = ஆண்மான்;
மடமான் = பெண்மான்; உகள = தாவ;
100. எதிர்செல் = எதிரே செல்லும்; வெண் = வெண்நிறமான;
மழை பொழியும் = மழையைப் பொழிகின்ற; திங்களில் = மாதத்தில்.
உரை: முல்லைநிலத்து
நுண்ணிய மணலில்,
நெருங்கிய இலைகளைக் கொண்ட காயா மலர், மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய வரகினூடே, முறுக்கிய கொம்புகளைகயுடைய ஆண்மானுடன் பெண்மான் துள்ளிக் குதித்து விளையாடுகின்ற
முல்லைநிலத்து,
எதிர்த்திசையிலிருந்து வெண்ணிறமான மழை பொழிகின்ற கார்
காலத்தில் (ஆவணி மாதத்தில்) ...............
காட்டைக் கடந்து விரைந்து வரும் மன்னனின் தேர்:
முதிர்காய் வள்ளியம் காடு
பிறக்குஒழிய,
துனைபரி துரக்கும் செலவினர்
அருஞ்சொற்பொருள்: 101. முதிர் = முதிர்ந்த; வள்ளியம் காடு (வள்ளி + அம் + காடு) வள்ளிக் கொடி படர்ந்த அழகிய காடு; பிறக்கு = பின்னுக்கு; ஒழிய = தங்க;
102. துனை = விரைவு; பரி = குதிரை;
துரக்கும் = செலுத்தும்; செலவினர் = பயணித்துக் கொண்டிருப்பவர்; 103. வினை = போர்வினை;
விளங்கு = திறமை மிகுதியாக விளங்கும்படி; நெடுந்தேர் = நீண்ட தேர்; பூண்ட = பூட்டிய;
மா = குதிரை.
உரை: போர் வினையை
நன்கு ஆற்றிய தலைவன், முதிர்ந்த காயினையுடைய வள்ளிக்கொடி
படர்ந்த காடு,
பின்னோக்கிச் சென்று மறைய, விரைந்து செல்லும் தேரினை விரைவாகச் செலுத்தினான். நெடுந்தேரில்
பூட்டப்பட்டுள்ள குதிரைகள் (ஆரவாரித்தன).
பின்னிணைப்பு
மாவலி மாமன்னன் (மாபலிச் சக்கரவர்த்தி)
பல புராணங்களில்
மாபலிச் சக்கரவர்த்தியைப் பற்றிய கதை
ஒன்று கூறப்பட்டுள்ளது. மாபலி என்பவன் திருமாலின்
அருளைப் பெற்ற பிரகலாதனின் பேரன். அவன் மிகுந்த வலிமையும் ஆற்றலும் உடையவனாக
விளங்கினான். தேவருலகத்தையும் மண்ணுலகத்தையும் வென்றான். தான் அடைந்த வெற்றிகளால்,
அவன் மிகுந்த ஆணவமுடையவனாக இருந்தான். அவன் ஆணவத்தை அடக்கி, தேவருலகத்தை அவனிடமிருந்து
மீட்பதற்காகத் திருமால் வாமனனாக அவதரித்தார். வாமனன் இரண்டடி உயரம் மட்டுமே உள்ள ஒரு
குள்ளன்.
ஒருநாள், மாபலி
நர்மதைக் கரையில் அசுவமேதயாகம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது,
வாமனன் அங்கே தோன்றி, தனக்கு மூன்றடி நிலத்தைத் தானமாகத் தரவேண்டுமென்று மாபலியிடம்
கேட்டான். மாபலி மூன்றடி நிலம் தருவதற்கு ஒப்புக்கொண்டான்.
நிலத்தைத் தானமாக அளிப்பதற்காக மாபலி தாரை நீரை வாமனன் கையிலிட்டான்.
தாரை நீர் கையில் பட்டவுடனேயே, வாமனன் மிகுந்த உயரமுடையவனாக மாறினான்.
வாமனன்
முதலடியால் மேல் உலகத்தையும், இரண்டாமடியால் நிலவுலகத்தையும் அளந்தான். மூன்றாம் அடியை
எங்கே வைப்பது என்று மாபலியை வினவினான். வாமனனாக வந்தவனின் உயர்ந்த தோற்றத்தைக் கண்டு மாபலி செயலற்றுத்
திகைத்தான். ஆகவே, மூன்றாமடியைத் தன் தலைமீது பொருத்தி அளக்க மாபலி
வேண்டினான்.
வாமனன் மாபலியின்
தலைமீது தன் திருவடியை வைத்து,
அவனைக் கீழுலகத்தில் ஒன்றான அதலத்தில் அழுத்தி,
அங்கு நிலைத்திருந்து, பேரசானாக அரசாளும்படி ஆணையிட்டான். மாபலி, “ஆவணி மாதம் திருவோண நாளன்று, ஆண்டுக்கொருமுறை,
நான் ஆண்ட நிலவுலகத்திற்கு வந்து,
என் மக்களை வாழ்த்த வரந்தரவேண்டும்.” என்று திருமாலை வேண்டினான்.
திருமாலும் மாபலி கேட்ட வரத்தை அளித்தார்.
அதற்கேற்ப, ஆண்டுதோறும், கேரள மாநிலத்தில், ஆவணி மாதம், திருவோண விண்மீன் கூடிய
நாளில் மாபலியின் மண்ணுலக வருகையின் நினைவாக, ஓணத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
Comments
Post a Comment