முல்லைப்பாட்டு பொருட்சுருக்கம்


முல்லைப்பாட்டு பொருட்சுருக்கம்

சக்கரம், வலம்புரிச் சங்கு ஆகியவற்றைத் தன் பெரிய கைகளில் வைத்துக்கொண்டு, திருமகளை மார்பில் தாங்கும்  திருமால், மாவலி மன்னன் தாரை வார்த்த நீர் கையில்பட்ட அளவிலே நிமிர்ந்து எழுந்த தோற்றத்தைப் போல்,  அகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தை வளைத்து, ஒலி முழங்கும் குளிர்ந்த கடல் நீரைப் பருகி, வலிமையுடன் உயர்ந்து எழுந்து, மலைகளை நோக்கி விரைந்து செல்லும் மேகங்கள், சிறுபொழுதாகிய  துன்பம் தரும் மாலைப்பொழுதில் பெருமழையைப் பொழிந்தன.  

பெரிதும் வயது முதிர்ந்த பெண்டிர், எவரும் அணுக முடியாத அரிய காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் சென்று, யாழிசை போல் வண்டுகள் ஆரவாரிக்க அரும்புகள் மலர்ந்திருக்கும் நறுமணம் மிக்க முல்லை மலரையும், படியில் கொண்டு சென்ற நெல்லையும் தூவி, இறைவனை வேண்டிக் கையால் தொழுது  நற்சொல் கேட்டு நின்றனர்.  அப்பொழுது, சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தன் தாயினைக் காணாது, துயருற்று அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருந்தது.  அதனைப்  பார்த்துக் குளிரால் நடுங்கிக்கொண்டு, தோளில் குறுக்கும் நெடுக்குமாகக் கைகளைக் கட்டியுள்ள  இடையர்குலப் பெண்,  வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த, உன்னுடைய  தாய் இப்பொழுதே வருவர்” என்று  கூறிய நன்மை தரும் நல்ல சொல்லை அவர்கள் கேட்டனர்.   நாங்கள் இன்று இறைவனைத் தொழுத  பொழுது, நல்லவர்களின் நல்ல வாய்ச்சொல்லைக் கேட்டோம்.  அதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து, போரை முடித்துத் தலைவன் வருவான்.   இது உண்மை.  நீ உன்னுடைய துன்பத்தால் எழுந்த வருத்தத்தினைக் களைவாயாக! மாந்தளிரின் நிறத்தினை உடையவளே!” என்று தலைவியிடம் பெருமுது பெண்டிர் பலமுறை வற்புறுத்திக் கூறவும், தலைவி அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளாமல், தன் மலர் போன்ற கண்களிலிருந்து முத்துப்போல் தனித்து வீழ்கின்ற நீர்த்துளிகள் ஒழுக, வருத்தத்தில் இருந்தாள்.

காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லைநிலக் காட்டில், நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவச் செடிகளையும், பசுமையான புதர்களையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில் அமைந்த அரண்களையும் அழித்து, காவலுக்காகக் காட்டிலுள்ள முள்ளால் மதிலை  வளைத்துக் கட்டிய இடத்தில், ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல் பரந்த பாசறையை வீரர்கள் அமைத்தனர்.

பாசறையில் தழையால் கூரை வேயப்பட்டு, ஒழுங்காக அமைந்துள்ள தெருவில், நாற்சந்தி கூடுமிடத்தில் உள்ள முற்றத்தில் காவலுக்காக நின்ற, மதநீர் ஒழுகும் கன்னங்களும், சிறிய கண்களும் கொண்ட யானை,  உயர்ந்து வளர்ந்த கரும்போடு நெருங்கக் கட்டிய நெற்கதிர்களையும், வயலில் விளைந்த இனிய அதிமதுரத் தழைகளையும் உண்ணாது அவற்றைத் தனது நெற்றியில் துடைத்து, கூரிய முனையையுடைய கொம்பின் மேலேற்றி, தும்பிக்கையில் அடக்கிக் கொண்டிருந்தது.  யானையைப் பயிற்றும் மொழியைத் தவிர வேறெதுவும் கற்காத பாகர், வடமொழியில் யானையிடம் பேசிக் கவளத்தைத் தின்னுமாறு யானைக்கு ஊட்டினர்.

தவவேடமுடைய அந்தணர், தம் காவி நிறம் தோய்ந்த ஆடையை, முக்கோலை நட்டு அதன்மேல் தொங்கவிட்டிருப்பது போல, வீரர்கள் தாம் செய்கின்ற நல்ல போரில் புறமுதுகிட்டு ஓடாமல் இருப்பதற்குக் காரணமான  வலிய வில்லை ஊன்றி அதன் மேல் அம்புக்கூட்டை தொங்கவிட்டனர்.  கூடாரம் அமைப்பதற்காக வில்லை ஊன்றிக் கயிற்றால் வளைத்துக் கட்டிய இருப்பிடத்தில், பூ வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி கேடயங்களை வரிசையாக வைத்து, வீரர்கள் தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு அரண்களை அமைத்தனர்.  வேறுவேறான பல்வேறு படைகளின் நடு விடத்தில், நீண்ட கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த திரைகளால் கூறுபடுத்தி, வேறோர் தனி இடம் மன்னனுக்கென்று அமைத்தனர்.

குறுகிய வளையணிந்த முன் கையினையும், கூந்தல் புரளும் அழகிய சிறு முதுகுப்புறத்தையும் உடைய பெண்கள் இரவைப் பகலாக்கும் வலிய பிடி அமைந்த ஒளிவீசும் வாளினைப் பல்வேறு நிறமமைந்த கச்சில் சேர்த்து கட்டியிருந்தனர். பாவையின் கையிலே  இருக்கின்ற விளக்கில் நெய் குறையுந் தொறும், நெய் வார்க்கும் குழாயினைக் கொண்டு நெய் வார்த்து, நெடுந்திரியினைக் கொளுத்தினர்.

நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமத்தில், காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள், நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல  தலையில்  தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர், தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச் செய்தனர்.

பொய் கூறாமல் (சரியாக), நேரத்தைக் கணக்கிட்டு, இவ்வளவு என்று கூறும் நாழிகைக் கணக்கர்  மன்னனைக் கண்டு தொழுது, அவன் புகழ் தோன்றுமாறு வாழ்த்தி, ”அலைகடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை வெல்லுவதற்குச் செல்பவனே! உனது நாழிகை வட்டிலில் (நேரத்தை அளந்தறியும் கருவி ) சென்றுள்ள நேரம் இவ்வளவுஎன்று அறிவித்தனர்.

குதிரைச் சவுக்கினை மடக்கி வளைத்துக் கட்டியதால் புடைத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டிய ஆடையும், சட்டையும் அணிந்த, அச்சம் தரும் தோற்றமும் வலிமையான உடம்பும் வீரமும் உடைய யவனர், புலிச்சங்கிலி தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமை பொருந்திய (மன்னன் இருக்கும்) நல்ல இல்லத்தில் அழகிய மணி விளக்கினை ஒளிரச் செய்தனர்
வலிய கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச்சீலைகள் அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட மன்னனின் பள்ளியறையில், (ஓரறையில்) செய்திகளை உடலசைவால் தெரிவிக்கும் நாவால் உரைக்கமுடியாத சட்டையணிந்த மிலேச்சர்கள் அருகாமையில் இருப்பர்.

போர் செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டதால், பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல் நாள் நடைபெற்ற போர்க்களக் காட்சிகளை நினைத்தபடியே) மன்னன் படுத்திருந்தான்.   பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்ததால் புண்பட்டு, பெண் யானைகளை மறந்திருக்கின்ற ஆண்யானைகளை நினைந்தும், அடிபட்ட பாம்பு துடிப்பதைப் போல்  துடித்து விழும்படி, யானைகளின் பருத்த துதிக்களை வெட்டி வீழ்த்தி, தாம் அணிந்திருந்த தேன் ஒழுகும் வஞ்சிமாலைக்கு  வெற்றியைத் தந்து, செஞ்சோற்றுக் கடன் தீர்த்துப் போர்க்களத்திலே இறந்த படைவீரர்களை நினைந்தும், தோலாலான கவசத்தை அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து, உணவு உண்ணாது வருந்தும் குதிரைகளை நினைந்தும், ஒரு கையினைப் படுக்கையின் மேல் ஊன்றி, கடகம் அணிந்த மற்றொரு கையினால் தலையைத் தாங்கி, மன்னன் நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

பகைவரைக் குறித்துப் படைக்கலங்களைச் செலுத்திய தனது வலிமையான விரலாலே பகைவரை வென்று, தான் சூடிய வஞ்சி மாலைக்கு வெற்றியை நிலைபெறச் செய்து மறுநாள் போரில் வெற்றி பெற்றதால் மனநிறைவு பெற்று, பகையரசர் கேட்டு நடுங்கும்படி வெற்றி முரசு முழங்க, மன்னன் பாசறையில் இனிமையாகத் துயில் கொண்டான்.

தலைவன் வரக்காணாது துயருற்று வருந்திய தலைவியை, அவள்  நெஞ்சம், ‘ஆற்றியிரு’ என்று சொல்லிக் கொண்டிருந்தது.  ஆனால், தலைவியோ துயரத்தை மறைக்க முடியாது, வருத்தத்தில் இருந்தாள்.  நீண்ட நேரம் சிந்தித்தாள்.  பின் தன்னைத் தேற்றிக் கொண்டாள்; கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற, கழறாமல் அணிந்து கொண்டாள்;  அறிவு மயங்கியும், அவ் அறிவு மயக்கத்தால் பெருமூச்செறிந்தும்,  அம்பு தைத்த மயில் போல் நடுங்கினாள்.  அவளின் அணிகலன்கள் நெகிழ்ந்தன.  பாவை விளக்கின் பெரிய சுடர் எரிய, அகன்று சிறந்து உயர்ந்து விளங்கும் ஏழு அடுக்கான அழகிய வீட்டில், கூரை கூடும் இடங்களில் மழைநீர் அருவி போலச் சொரிந்து.  அதனால் ஏற்பட்ட இனிய பலவாகிய முழக்கத்தினைக் கேட்டவாறே தலைவி படுத்துக் கிடக்கின்றாள்.  அத்தலைவியின் காதுகள் நிறையுமாறு ஆரவாரித்தன.

பகைவரை வென்று அவர்கள் விரும்புகின்ற நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையோடு வெற்றிக் கொடியை உயர்த்தியபடி, வெற்றியை அறிவிக்கும் வகையில், ஊது கொம்பும், சங்கும் முழங்கத் தலைவன் திரும்புகின்றான்.  முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக் கொண்ட காயா மலர், மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய வரகினூடே, முறுக்கிய கொம்புகளைகயுடைய  ஆண்மானுடன் பெண்மான் துள்ளிக் குதித்து விளையாடுகின்ற முல்லைநிலத்து, எதிர்த்திசையிலிருந்து வெண்ணிறமான மழை பொழிகின்ற கார் காலத்தில் (ஆவணி மாதத்தில்) போர் வினையை நன்கு ஆற்றிய தலைவன், முதிர்ந்த காயினையுடைய வள்ளிக்கொடி படர்ந்த காடு, பின்னோக்கிச் சென்று மறைய, விரைந்து செல்லும் தேரினை விரைவாகச் செலுத்தினான். தலைவனின் நெடுந்தேரில் பூட்டப்பட்டுள்ள குதிரைகள் தலைவியின் செவிகள் நிறையுமாறு ஆரவாரித்தன.


Comments

Popular posts from this blog

முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

முல்லைப்பாட்டு – அறிமுகம்

முல்லைப்பாட்டில் உவமைகள்